பக்கங்கள்

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அகில இந்தியத் தலைவராகத் தேர்வு!

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் பேரியக்கத்தின் அகில இந்தியத் தலைவராக மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! 

தமிழகத்தைச் சேர்ந்தவர்
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் 1935-இல் வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கருகே புத்தகரம் கிராமத்தில் பிறந்தார்கள். அந்தக் கிராமத்தின் உர்தூ பள்ளியில் தொடக்கக்கல்வியைப் பயின்ற பிறகு உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் சேர்ந்து மார்க்கக் கல்வியில் தேர்ச்சி பெற்றார்கள். தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் முன்ஷி ஃபாஸில் பட்டமும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் படித்துத் தேர்ச்சி பெற்றார்கள்.

பதின்பருவத்திலேயே இயக்கத் தொடர்பு
படிப்பை முடித்த கையோடு வட நாடு சென்று ராம்பூரில் ஜமாஅத் தலைமையகத்தில் தம்மை சேர்த்துக் கொண்டார். 1954-இல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார். அலிகர் கிளையின் தலைவராக பத்தாண்டுகள் பணியாற்றி இருக்கின்றார். 1990- இலிருந்து 2007 வரை ஜமாத்தின்  அகில இந்தியத் துணைத் தலைவராகப் பணியாற்றியவர கடந்த பல்லாண்டுகளாக ஜமாஅத்தின் மத்திய பிரதிநிதிகள் சபை மற்றும் மத்திய ஆலோசனைகள் குழு ஆகியவற்றின் முக்கியமான உறுப்பினராகவும் அவர் செயலாற்றி வந்துள்ளார்

பத்திரிகையாளர்
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி ஒரு பத்திரிகையாளரும் கூட.  ஜிந்தகி நவ் என்கிற உர்தூ மாத இதழின் ஆசிரியராக ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனுபவமும் அவருக்குண்டு.  கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக தஹ்கீகாதே இஸ்லாமி என்கிற காலாண்டிதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.


அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிறுவன உறுப்பினர்களில் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்களும் ஒருவர்.

எழுத்தாளர், பன்னூலாசிரியர்
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளரும் கூட. சற்றொப்ப முப்பத்து ஆறு நூல்களை யாத்திருக்கின்றார். இவற்றில் பதினேழு நூல்கள் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. தமிழிலும் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல், சமூகக் கட்டமைப்பில் முஸ்லிம் பெண்களின் பங்கு, மக்கள் சேவை, ஒன்றே குலம் ஒருவனே தேவன், பெண்களும் இஸ்லாமும் ஆகிய முத்தான ஐந்து நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கின்றன. இவற்றை சென்னை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது. 

இவற்றில் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்கிற நூல் அரபி, ஆங்கிலம், துருக்கி, இந்தி, தமிழ், வங்காளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற நூல் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, மராட்டி, குஜராத்தி, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. 

இஸ்லாத்தில் பெண்களின் அந்தஸ்து, உரிமைகள் பொறுப்புகள், நாட்டு நடப்பு, ஃபிக்ஹ் விவகாரங்கள், குடும்ப அமைப்பு, அடிப்படைக் கோட்பாடுகள், இஸ்லாமிய இயக்கம் என பல்வேறு தலைப்புகளில் நிறைய எழுதியிருக்கும் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் இன்று சமகால மார்க்க அறிஞர்களில் தனிச்சிறப்பும் மகத்துவமும் பெற்றவராக ஜொலிக்கின்றார். 

கல்வியாளர்
மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் ஒரு கல்வியாளரும் கூட. அலிகரில் பல்லாண்டுகளாகச் செயலாற்றி வரும் இதாரா-ஏ-தஹ்கீகே தஸ்னீஃபே இஸ்லாமி ஆய்வுக்கழகத்தின் செயலாளராக, தலைவராக சேவையாற்றி வந்துள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் வாரங்கல் நகரில் செயல்பட்டு வரும் ஜாமியத்துஸ் ஸுஃபா பல்கலைக் கழகத்தின் வேந்தராக இருக்கின்றார். இதே போன்று உத்திரப் பிரதேசம் ஆஜம்கர் பல்ரியா கஞ்சு நகரில் செயல்பட்டு வரும் ஜாமியத்துல் ஃபலாஹ் பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் இருக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin